ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

பேரவைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் எச்சரிக்கை! April 26, 2019


Image
பேரவைத் தலைவர் நடுநிலைமை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது  நடவடிக்கை எடுத்தால்,  பேரவைத் தலைவர் மீது திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, 3 எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால், 3 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை 
வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  மே 23ஆம் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் இன்று பேரவைத் தலைவரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது என்றும் அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநரும் சட்டவிரோதமாக அனுமதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதன் பலன் பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணியாக மாறியது. ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக  சீரழிவுகளை தினம் தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

17ஆவது மக்களவைத் தேர்தலுடன் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 
தேர்தல் முடிவுற்று, பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டதால் வருகின்ற மே 19-ஆம் 
தேதி மீதியுள்ள நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால் - சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து பேரவைத் தலைவரை சந்தித்து இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, 22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அதிமுக அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இந்த நிகழ்வு மக்களைவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துச் சொல்ல துணை முதலமைச்சரும் - அமைச்சர்களும் வாரணாசி சென்று சந்தித்த தினத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு ஊழல் ஆட்சியை- மக்கள் விரோத ஆட்சியை எப்படியாவது தக்க வைத்து விட வேண்டும் என்பதில் அதிமுகவை விட பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலத்தில் இருக்கும் ஆளுநரும் தொடர்ந்து செயல்படுவது “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரைப் பொறுத்தவரை கட்சி சார்பற்றவர்; அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர் ஆவார். “ பாரபட்சமற்ற முறையில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது” என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர்களை எச்சரித்துள்ளது என்பதை மேற்கோள்காட்டியுள்ளார்.

கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று  கொடுக்கப்பட்டுள்ள மனு மீது பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் ஓ. பன்னீர் செல்வமும் அவரோடு சேர்ந்து முதலமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற  உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் பேரவைத் தலைவர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு “கொல்லைப்புற வழியாக” மெஜாரிட்டி தேடித்தர முயலக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, பேரவைத் தலைவர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், பேரவைத் தலைவர்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

source ns7.tv