திங்கள், 29 ஏப்ரல், 2019

இலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும்...’ வீடியோ வெளியிட்ட நபர்! April 29, 2019

Image
இலங்கையை போல் தமிழகத்திலும் 3 மாதங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை தலைநகர் கொழும்பில், இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக, தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில், கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அச்ச உணர்வுடன் தான் வெளியில் செல்வதாக, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் கூட, பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை தொலைபேசியில் பேசிய நபர், தம்மை மதுரையை சேர்ந்த சி.எம்.சாமி என அறிமுகப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் 3 மாதங்களில் மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறிய அவர், இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்துதான் தீவிரவாதிகள் சென்றதாகவும் கூறினார். 
இதற்கு மதுரையின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் உடந்தையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து மதுரை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சமூக வலைதளத்தில் சி.எம்.சாமி என்பவர் வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது. 

source ns7.tv