புதன், 17 ஏப்ரல், 2019

தமிழகத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! April 17, 2019

source ns7.tv
Image
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த சூறைக் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  ஓரிரு இடங்களில் பலத்த மழை இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலான பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழையும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உள் தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வேலூர்,
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை,திருவள்ளுர், காஞ்சிபுரம்,கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி,குழித்துறை,பேச்சிப்பாறை உள்ளிட்ட இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  இருக்கும், அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.