செவ்வாய், 30 ஜனவரி, 2018

தமிழக அரசுக்கு தொழு நோயாளிகள் வைக்கும் கோரிக்கைகள்! January 30, 2018

Image

பேருந்து கட்டண உயர்வைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு கட்டணச் சலுகை வேண்டும் எனக் கேட்கின்றனர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழு நோயாளிகள். 

தொழு நோய் ஒழிப்பு தினமான இன்று அவர்களின் கோரிக்கைகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது காண்போம். 

சமூகத்தில் சக மனிதர்களால் ஒதுக்கப்பட்டும் விரட்டப்பட்டும் தொழு நோயாளிகள் சந்திக்கும் அவமானங்கள் ஒன்றிரண்டு அல்ல. தொழு நோய் குறித்த எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் இது போன்ற சோகங்கள் தொடரத்தான் செய்கின்றன.   

மைக்ரோ பாக்டீரிம் என்ற பாக்டீரியாவால் உருவாகும் தொழுநோய் பொதுவாக தோல் மற்றும் நரம்புகளை வெகுவாக பாதிப்படையச் செய்துவிடும்.  முறையாக சிகிச்சை பெற்றால் இந்நோயிலிருந்து முழுமையாக விடுபடமுடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1986ம் ஆண்டுக்கு முன்பு வரை தொடர் சிகிச்சை ழூலமே தொழு நோயை குணப்படுத்த முடிந்தது ஆனால்  தற்போது கூட்டு மருந்து சிகிச்சை ழூலம் தொழுநோயை குணப்படுத்த முடிகிறது என அந்நோயிலிருந்து விடுபட்டவர்கள் கூறுகின்றனர். 

நமது உடலில் உணர்ச்சியற்ற தேமல் அறிகுறிகள் தென்பட்டால் அது தொழுநோயின் 
அறிகுறியாகக் கருதப்படுகிறது. தேசிய தொழுநோய் ஒழிப்பு மூலம் மாநில அரசிற்கு மருந்துகள் அனுப்பப்பட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட மருத்துவ மனை களில் மக்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 
அரியலூர் மாவட்டத்தை பொருத்தவரை தற்போது 47 தொழு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கூட்டு மருந்து சிகிச்சை பெற்றவர்களில் சிலருக்கு மருந்து உட்கொண்டதினால் மறுவினை பாதிப்புக்கும் சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது அவ்வாறு சிகிச்சை பெறும் காட்டு பிரிங்கியத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறும் போது சிகிச்கைக்காக தஞ்சைக்கு சென்று வர வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்.  

அவ்வாறு செல்லும் போது துணைக்கு ஒருவரை அழைத்து செல்ல வேண்டியுள்ளது எனவும் ஆனால் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்ப்பட்டதால் அது தங்களுக்கு அதிக பொருளாதார சுமையை தருவதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார். தங்களுக்கு பேருந்து பயணக் கட்டணத்திலிருந்து சலுகை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவரின் சகோதாரர் நடராஜனும் தொழு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தனது இரண்டு மகன்களை தொழு நோய் தாக்கியதால் மிகுந்த மன வேதனையில் இருக்கும் அவர்களின் தாயார் நல்லம்மாளுக்கு வறுமை கூடுதல் அவதியைக் கொடுக்கிறது. 

இருவருக்கும் தானே சமையல் செய்து கொடுக்க வேண்டியுள்ளதாகக் கூறும் நல்லம்மான் வயதாகி விட்டதால் தனக்கு கூலி வேலை யாரும் தருவதில்லை என்று தனது வேதனையை பதிவு செய்கிறார். எனவே அரசாங்கம் உதவி தொகை வழங்கினால் மட்டுமே தங்களது மகன்களை காப்பாற்ற முடியும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறார். 

சகமனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் தொழு நோயாளிகளுக்கு வறுமையாலும் கூடுதல் மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுகிறது.