திங்கள், 21 அக்டோபர், 2019

இந்திய அளவிலான வேலை நிறுத்தம் செய்யும் வங்கி பணியாளர்கள்!

credit ns7.tv
Image
அக்டோபர் 22ம் தேதி முதல் இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக, இந்திய வங்கித்துறையின் இரண்டு மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்டு மாதம் அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, கார்பரேசன் வங்கி, ஓரியண்டல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 6 சிறிய வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 4 வங்கிகளுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்தியாவின் நிதித்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த இணைப்பு நடைபெறுவதாக, வங்கிகள் இணைப்புக்கு காரணமாக கூறப்பட்டது. வங்கிகள் இணைக்கப்பட்டதா 27 ஆக இருந்து வந்த பொதுத்துறை வங்கிகள் 12 ஆக சுருங்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தான் இந்திய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி தொழிற்சங்கங்களான அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் 
இந்திய வங்கி பணியாளர் கூட்டமைப்பு ஆகிய 2 தொழிற்சங்கங்களும் அக்டோபர் 22ம் தேதி வேலை நிறுத்தத்திற்கு அதன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இரண்டு தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளதால், வழக்கமான வங்கி நடவடிக்கைகளில் பாதிப்பு இருக்கும் என்று ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. இவை மட்டுமல்லாமல் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, வங்கி சீர்திருத்தங்கள், அதிக அபராதம் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் அதிகப்படியான சேவைக்கட்டணமாகியவற்றை எதிர்த்து இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இவை மட்டுமல்லாது மோசமான வங்கிக்கடன்களை திரும்பப்பெறுதல், வேலை பாதுகாப்பு மற்றும் கடனை திரும்ப செலுத்த தவறியவர்கள் மீதான கடுமையான நடவடிக்கை எடுக்க கோருதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டேட் வங்கி, வேலை நிறுத்த அழைப்பு விடுத்துள்ள இரண்டு தொழிற்சங்கங்களிலும் அதன் பணியாளர்கள் குறைந்த அளவே இருப்பதால், இந்த வேலை நிறுத்தத்தின் தாக்கம் அதன் வங்கிகளில் பெரிய அளவில் இருக்காது என்று தெரிவித்துள்ளது. 
இந்த வேலை நிறுத்த அறிவிப்பானது நிதி நிறுவனம் பொது தளத்தில் வெளியிட்ட “வங்கிகளை இணைப்பது என்பது வங்கிகளை கொல்வது” என்ற பெயரில் வெளியிட்ட பொது அறிக்கையை அடுத்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் “அரசு வேண்டுமானால் இதை வங்கிகள் இணைப்பு என்று சொல்லலாம். ஆனால், இது 6 வங்கிகளை கொலை செய்வது. ஏனெனில் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட வங்கிகள், இணைப்பிற்கு பிறகு வங்கி துறையில் இருந்து காணாமல் போய்விடும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைத் தொடர்ந்தே இந்திய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.