செவ்வாய், 15 அக்டோபர், 2019

சீமான் விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்:

Image
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக சட்டம் தனது கடமையை செய்யும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என்பதுபோன்ற பல கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்த நிலையில் சீமானின் பேச்சு குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக வந்த அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்த தனது கருத்தை நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். 
தமிழர்கள் யார் என்று தான்தான் சான்று தருவேன் என்பது போல் சீமான் பேசி வருவதாகக் குறிப்பிட்ட, அமைச்சர் பாண்டியராஜன்,  எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவராக இருந்தாலும் தமிழுக்கு சிறப்பான தொண்டாற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

credit ns7.tv