செவ்வாய், 22 அக்டோபர், 2019

இவர் தான் நேர்மையான மனிதர்” - ராகுல் காந்தி குறிப்பிடும் பாஜக பிரமுகர்!

Image
மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து பேசிய ஹரியானா பாஜக வேட்பாளரின் வீடியோவை குறிப்பிட்டு “இவர் தான் பாஜகவின் நேர்மையான மனிதர்” என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“யாருக்கு நீங்கள் வாக்களித்தாலும், அது பாஜகவிற்கு வந்து சேரும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார் செய்துள்ளோம். நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் அது எங்களுக்கு தெரிந்துவிடும், எங்களுக்கு தெரியாது என்று நினைக்காதீர்கள்” 
ஹரியானா மாநிலம் அசாந்த் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ., பக்ஷிஷ் சிங் விர்க் என்பவர் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது இதனை கூறி உள்ளார். இவர் தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன் தேர்தல் பார்வையாளர் ஒருவரை நியமித்து இது தொடர்பாக விசாரிக்க கூறியுள்ளது.
இது போலியான வீடியோ, இதனை வைரல் ஆக்கியுள்ளனர், தான் அது போல மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்று விர்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ விர்க் பேசும் வைரல் வீடியோவினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி “பாஜகவின் மிகவும் நேர்மையான மனிதர் இவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பரபரப்பாக மாறியுள்ளது.

credit ns7.tv