வியாழன், 31 அக்டோபர், 2019

சுஜித்தை மீட்பதில் தோல்வி: ஸ்டாலின் எழுப்பும் 8 கேள்விகள்!


Image
கோபத்தின் உச்சியில் இருக்கும் மக்களின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனச்சாட்சியுடன் பதில் சொல்லியே ஆகவேண்டும்  என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 25ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளை கிணற்றினுள் விழுந்து சிக்கிக்கொண்டான். 5 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்பு பணிகளின் இறுதியில், சுஜித் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
சுஜித்தின் உடலுக்கு முதல்வர், துணைமுதல்வர், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மீட்புப் பணிகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து பெரும்சர்ச்சை எழுந்துள்ளது. சரியான திட்டமிடல் இல்லை, மீட்புப் பணிகளை வழிநடத்துவது யார் என்பதில் குழப்பம் இருக்கிறது என்று மீட்புபணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே கரூர் தொகுதி நாடாளுமன்ற எம்பி ஜோதி மணி கேள்வி எழுப்பியிருந்தார். பின்னர் சுஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மீட்பு பணிகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார். குறிப்பாக “80 மணி நேரம் மீட்புப் பணி” என்று அமைச்சர்கள் தங்களை சமூகவலைதளங்களில் விளம்பரப்படுத்தினார்கள். அது மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் சுதந்திரத்தை பறித்தது என்று கடுமையாக சாடியிருந்தார்.
அதோடு தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மண் வகை பாறையா அல்லது கடினப்பாறையா என்றெள்ளாம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தனியாக வரைபடம் இருக்கிறது. ஆனால், நடுக்காட்டுப்பட்டி மண் வகை பாறையா அல்லது கடினப்பாறையா என்று தெரிந்துகொள்ள அதிமுக ஆட்சி மூன்று நாட்கள் போராடியிருக்கிறது. சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை?. இதனால் ஓடிவிளையாட வேண்டிய சின்னஞ்சிறு சுஜித்தை மயானத்திற்கு கொண்டுபோய்விட்டது அதிமுக அரசு.  ஒரு சுஜித்தை காப்பாற்றமுடியாத அதிமுக ஆட்சி பேரிடர் காலத்தில் தமிழக மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2009ல் திமுக ஆட்சியின் போது தேனியில் 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டான். அந்த சிறுவனை மீட்க திமுகவினர் ஏன் ராணுவத்தையோ, துணை ராணுவத்தையோ மீட்கவில்லை. நாங்கள் எடுத்தது போன்று முயற்சியை திமுக ஆட்சியில் எடுக்கவில்லை. ஸ்டாலினின் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. எல்லாம் தெரிந்த விஞ்ஞானியாக இருக்கும் ஸ்டாலின் ஏன் தேனி சிறுவனை உயிரோடு மீட்கவில்லை. அவர் மனசாட்சியோடு நடந்துகொள்ளவேண்டும் என்று சாடியிருந்தார்.
முதல்வரின் பதிலுக்கு, பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “சிறுவனை மீட்பதில் ஏன் அதிமுக அரசு மெத்தனம் காட்டியது” என்று பிரதான எதிர்கட்சித்தலைவராக இருக்கும் நான் கேள்வி கேட்டால் முதல்வர் கோபப்படுகிறார். ஸ்டாலின் என்ன விஞ்ஞானியா என்ற அர்த்தமற்ற கேள்விகளை கேட்கிறார். தனது தோல்வியை மறைக்க தவிக்கிறார். நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்விஎழுப்பவில்லை; சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என்னுள் எழுந்த சந்தேகத்தை தான் கேட்டேன் என்று அந்த அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.
மேலும், தாறுமாறாக குளறுபடிகளுடன் நடைபெற்ற மீட்புப்பணி என்று டிடி நெக்ஸ்ட் என்ற பத்திரிகையில் நான் எழுப்பியது போன்றே சந்தேகங்களை அவர்களும் எழுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்காவது முதல்வர் பதில் சொல்வாரா அல்லது அந்த குழுமத்தின் மீது எரிந்து விழுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு அந்த கேள்விகளையும் மேற்கோள்காட்டியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் மேற்கோள்காட்டியுள்ள கேள்விகள்:
சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவ, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டட் 12 மீட்புக் குழுக்கள் சுஜித் விழுந்த இடத்திற்கு அக்டோபர் 26ம் தேதிதான் வந்தன. சிறுவனை மீட்க ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மணி நேரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு ஒதுக்கிக் கொடுத்து முயற்சி செய்தார்.
➤ உயிருள்ள- ஆனால் உயிருக்குப் போராடும் குழந்தையை  ஆழ்துளைக் கிணற்றுக்குள் வைத்துக் கொண்டு மாவட ஆட்சித்தலைவர் இப்படியொரு சோதனை முறையில் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஏன்?

➤ முதல் நாள் இரவு 9 மணிக்கு அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அங்கு
வந்தார். “இரண்டாவது ஆழ்துளைக் கிணறு தோண்ட வேண்டும்" என்பது
அவர் எடுத்த முடிவு. பூமிக்கடியில் பாறை இருந்ததால் அந்தக் கிணற்றைத்
தோண்ட முடியவில்லை. பாறை இருந்த இடத்தில் தோண்டுவதற்கு அமைச்சர்
 உத்தரவிட்டது ஏன்?
➤ குழந்தை விழுந்து 6 மணி நேரம் கழித்து தேசியப் பேரிடர் மீட்புப் படை
அழைக்கப்பட்டது ஏன்?
➤ அரக்கோணத்திலிருந்து 5 மணி நேரத்தில் வர வேண்டிய அந்தப்
படையினர் சம்பவ இடத்திற்கு வர 12 மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன்?
 ஹெலிகாப்டரில் அவர்களை அழைத்து வராதது ஏன்?
➤ மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத்துறை தோல்வியடையும்
வரை காத்திருந்து, பிறகு காலதாமதமாக தேசிய பேரிடர் மீட்பு படை
மீட்புப் பணியில் ஈடுபடுத்தியது ஏன்?
➤ தேசிய பேரிடர் மீட்புப் படை, இதுபோன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த
குழந்தைகளை மீட்கும் பணி, இதற்கு முன் செய்ததில்லை என்று அதன்
செய்தித் தொடர்பாளரே பேட்டி அளித்துள்ளதற்கு அரசின் விளக்கம் என்ன?

➤ அக்டோபர் 27-ஆம் தேதி வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் (மாநில
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் வரும்
வரை, 2 நாட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொறுப்பில் மீட்புப் பணிகளை முதலமைச்சர் ஒப்படைத்தது ஏன்?
மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மீட்புப் படைக்கும் "கமாண்டர்” ஆக இருக்கும் வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், இரு நாட்கள் கழித்து, அக்டோபர் 27-ஆம் தேதியன்று சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்தது ஏன்?  என்ற 8 கேள்விகளை ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், அனுபவம் இல்லாத தேசியப் பேரிட மீட்புப் படையை நம்பி அழைத்து, காலத்தை விரயம் செய்ததற்கு பதிலாக, ராணுவத்தையோ, துணை ராணுவத்தையோ அழைக்காதது அதிமுக அரசின் தோல்விதானே என்று 9 வது கேள்வியையும் கூடுதலாக எழுப்பியுள்ளார்.
“இவை அனைத்தும் பொய்” என்று ஒரே போடாக போட்டுவிட்டு கடந்து போக முதல்வர் முயற்சி செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv