திங்கள், 14 அக்டோபர், 2019

அயோத்தி வழக்கில் இன்று முதல் இறுதிக்கட்ட விசாரணை!

Image
அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று இறுதிக்கட்ட விசாரணை  தொடங்கவுள்ள நிலையில், டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குறிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அதனை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் மூலவர் ராம் லல்லா ஆகிய 3 அமைப்பினரும் சமமாக பகிர்ந்து கொள்ளவேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தும் தீர்வு எட்டப்படவில்லை. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினமும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் தசரா விடுமுறை முடிந்து அயோத்தி வழக்கில் இன்று முதல் இறுதிகட்ட விசாரணை நடைபெற உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் தீர்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 17-ஆம் தேதிக்குள் இறுதி வாதங்கள் நிறைவடைந்துவிடும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.
அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், அயோத்தி மாவட்டத்தில் இன்று முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

credit ns7.tv