சனி, 4 ஜூலை, 2020

குப்பைக்கூடையில் வைத்து பராமரிக்கும் அம்மா!

இந்த கொரோனா காலத்திலும் தொடர்ந்து தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்வர்கள் மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தான். அவர்களின் அன்றாட பணிகளில் இருக்கும் கடமை உணர்வு தான் இன்று நம் அனைவரையும் பாதுகாக்கிறது. ஆனால் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் யார் மனதிலும் எழாமல் இல்லை.

இறந்து போன மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கும் மக்களே இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள். இந்நிலையில் திருப்பூரில் வேலை பார்க்கும் ஒரு துப்புரவு தொழிலாளரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்தவர் சுஜா. அவருக்கு 3 வயதில் பொட்டு என்ற மகள் இருக்கிறார். சுஜா திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சியின் துப்பரவு பணியாளாராக பொறுப்பு வகிக்கிறார். தன்னுடைய மகள் பொட்டுவை பாதுகாப்பாக விட்டுச்செல்ல ஒரு இடமும் இல்லாத காரணத்தால் தன்னுடனே வேலைக்கும் அழைத்துச் செல்கிறார் சுஜா. பெண் குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லாத சூழலால் அவரை இவ்வாறு அழைத்து செல்வாதாக கூறும் சுஜா, சில நேரங்களில் பொட்டுவை குப்பை அள்ளும் கூடையில் வைத்து தள்ளிச் செல்லுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

பார்ப்போர் நெஞ்சை உலுக்கும் விதமாக இருக்கும் இந்த அவல நிலையில் பணியாற்றி வருகிறார் சுஜா. கொரோனா தடுப்பிற்காக சுகாதார பணியாளர்களுக்கு தர வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி சுஜா தினமும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருவது மேலும் வேதனை அளிக்கிறது.