வியாழன், 9 ஜூலை, 2020

நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐ.ஐ.டி-யில் பி.எச்.டி: திருச்சி என்.ஐ.டி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

திருச்சி என்.ஐ.டி உயர்க்கல்வி நிறுவனத்தில் பி.டெக் படிக்கும் மாணவர்கள், டெல்லியிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) நேரடியாக பி.எச்.டி படிப்பிற்கு அனுமதி பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது .

இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் இது சாத்தியமானதாக டெல்லி ஐ.ஐ.டி தலைவர் ராமகோபால் ராவ் தெரிவித்தார். மேலும், என்.ஐ.டி- அகர்தலா, வாரங்கால் போன்ற கல்வி நிறுவனங்களுடன் இதுபோன்ற புரிந்துணர்வை ஏற்கனவே ஐ.ஐ.டி கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், திருச்சி என்.ஐ.டியில்  ஆறாவது செமஸ்டர் வரை 8.00 சி.ஜி.பி.ஏ வைத்திருக்கும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு, கோடைப் பருவ, பணிச் சூழல் பயிற்சி மற்றும் நான்காம் ஆண்டு பாடத்திட்டத்தை டெல்லி ஐ.ஐ.டியில் தொடர  வாய்ப்பு வழங்கப்படும்.  நான்காம் ஆண்டில் ‘பாடநெறி மற்றும் ஆராய்ச்சியில் போதுமான தகுதியை வெளிப்படுத்தும்’ மாணவர்கள் நேரடியாக பி.எச்.டி திட்டத்தில் சேர அன்டுமதிக்கப்படுவார்கள். இவர்கள், கேட் அல்லது வேறு எந்த தேசிய அளவிலான தேர்விற்கும் தகுதி பெறத் தேவையில்லை.

இதன் மூலம் ஐ.ஐ.டி டெல்லியின்- பிரதமரின் ஆய்வு உதவித்தொகைத் திட்டத்தில் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை திருச்சி என்.ஐ.டி மாணவர்களுக்கு இந்த முயற்சி வழங்குகிறது.

இரண்டு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பிடெக், இரட்டை பட்டம் (Dual Degree) எம்டெக் மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களை  பரிமாறிக்கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கிறது .