திங்கள், 12 நவம்பர், 2018

ரெட் அலர்ட் எப்போது விடுக்கப்படுகிறது? November 11, 2018

Image

தமிழகத்திற்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் வரும் 15ம் தேதி அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

தற்பொழுது வானிலை மையங்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தையான “ரெட் அலர்ட்” எப்போது விடுக்கப்படுகிறது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.

அடுத்த 5 நாட்களில் வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல் அறியும்பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். அந்த எச்சரிக்கையானது பச்சை எச்சரிக்கை (Green Alert ), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) , ஆம்பர் எச்சரிக்கை ( Amber Alert)  மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) என மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

பச்சை எச்சரிக்கை கொடுக்கப்பட்டால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. ஏனெனில், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் பட்சத்தில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அப்பொழுது, பயணம் செய்வதை மக்கள் தவிர்க்கவேண்டும்.

மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது. 

எனவே ரெட் அலர்ட் பற்றி தெரிந்துகொண்டு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மக்கள் இருக்கவேண்டும் என நியூஸ் 7 தமிழ் கேட்டுக்கொள்கிறது.