திங்கள், 26 நவம்பர், 2018

​ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! November 26, 2018

Image

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி தொழிலதிபர் வேணு சீனிவாசன், முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை ஆணையர் திருமகள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

அப்போது ஆஜரான ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை, வழக்கு தொடர்பான 2,100 ஆவணங்கள் 2009 - 2013-ம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின்னால் சதி நடப்பதாகவும், தனக்கு எதிராக சிபிசிஐடியில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கூறினார்.

பெண் எஸ்.பி ஒருவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்து விசாரணை ஆவணங்களை கேட்பதாகவும், சிலை கடத்தல் தடுப்பு குழுவினர் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல், ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக  எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் அளிக்கவும் ஐ.ஜி.பொன். மாணிக்கவேலுவுக்கு அனுமதி அளித்தனர்.