வியாழன், 22 நவம்பர், 2018

தேர்தல் இலாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு தமிழக அரசு தள்ளிவிட்டது - சென்னை உயர்நீதிமன்றம் November 22, 2018

Image

தேர்தல் இலாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு தமிழக அரசு தள்ளிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 

ரேசன் அரிசி கடத்திய வழக்கில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத்தை விடுவிக்கக் கோரி அவரது மனைவி சவுஜன்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்தாண்டு மட்டும் இலவச அரிசி திட்டத்திற்காக இரண்டாயிரத்து 110 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 31 அரசு ஊழியர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், ஏழை மக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டிய திட்டத்தின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறுவதால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்தனர். இனி வரும் காலங்களில் இலவச ரேசன் அரிசியை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இரண்டாயிரத்து 110 கோடி பணத்தைக் கொண்டு மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தியிருந்தால் அனைவரும் பயனடைந்து இருப்பார்கள் என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் இலாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டதாக வேதனை தெரிவித்தனர். 

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை குறித்தும் அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டால் ஆகும் செலவு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.