ஞாயிறு, 22 டிசம்பர், 2019

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை திமுக போராடும் : மு.க.ஸ்டாலின்

Image
நாளை மட்டுமல்ல, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை, திமுக போராடும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் 110 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், அண்ணா அறிவுக்கொடை என்ற 64 தொகுதிகள் குறித்த நூல் வெளியீட்டு விழா, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, நூலை வெளியிட்டார். அப்போது பேசிய ஸ்டாலின், நாடே பற்றி எரிய, அதிமுகவும், பாமகவும் குடியுரிமை சட்டத்திற்கு வாக்களித்ததே காரணம் என்றார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும் வரை, திமுக தொடர்ந்து போராடும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, திமுக நாளை நடத்தும் பேரணியில் பங்கேற்க மாட்டோம் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று விட்டதால், மக்கள் நீதி மய்யம், பேரணியில் பங்கேற்காது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னையில் திமுக நாளை நடத்தவுள்ள பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், இயக்குனர் வராகி மனு அளித்துள்ளார்.

credit ns7.tv