சனி, 19 ஜனவரி, 2019

உலகளவில் கிறித்துவர்கள் துன்புறுத்தலுக்குள்ளாகும் நாடுகளில் 10வது இடத்தில் இந்தியா! January 18, 2019

Authors
Image
ஆசியாவில் வாழும் கிறித்துவர்களில் மூன்றில் ஒருவர் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக 'ஓபன் டோர்ஸ்' என்ற அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த ஆய்வுக் குழு நடத்திய 2019ம் ஆண்டிற்கான உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது.  உலகம் முழுவதும் கிறித்தவர்கள் மீதான மத அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் குறிப்பாக சீனா மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்காவில்(Sub-Saharan Africa) அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசியாவில் கிறித்தவர்கள் துன்புறுத்தலுக்குள்ளாகும் நாடுகளில் சீனா முதன்மையான நாடாகும்.
ஏனெனில், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் வாழும் 100 மில்லியன் கிறித்துவர்கள் அவர்களது மதவெளிப்பாட்டிற்கெதிரான புதுப்புது சட்டங்களால் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பதையும் 'ஓபன் டோர்ஸ்' பதிவு செய்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் கிறித்தவர்கள் துன்புறுத்தலுக்குள்ளாகும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10ம் இடத்தில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கிறித்தவ தேவாலயங்கள் உருவாகாமல் தடுக்க இந்து அதிதீவிரவாதிகளால்(Hindu extremists) கிறித்தவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 6 வருடங்களில் கிறித்தவர்களின் மீதான துன்புறுத்தல்கள் உலகளவில் சீராக அதிகரித்து வந்துள்ளதையும் தெள்ளத்தெளிவாக இந்த ஆய்வு முடிவுகள் படம்பிடித்துக் காட்டுகிறது. 
இதன்படி உலகளவில் மொத்தம் 13.9 சதவிகிதம் கிறித்தவர்கள் கொடூர துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களுக்கும் மேல். அதுமட்டுமின்றி 4300 கிறித்தவர்கள், அவர்கள் கிறித்தவர்கள் என்கிற காரணத்தினாலேயே கொல்லப்பட்டுள்ளனர். இப்படியாக உலகம் முழுக்க கிறித்தவர்கள் துன்புறுத்தப்படுவதையும் கொல்லப்படுவதையும் ஐக்கிய ராஜ்யம் மற்றும் அயர்லாந்து  ‘ஓபன் டோர்ஸ் நிறுவன சி.இ.ஓ’ ஹென்ரியேட்டா ப்ளைத் இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் நைஜீரியாவில் உள்ள போகோ அராம் போன்ற மத ரீதியிலான அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபடுவதன் காரணமாக, அங்கு கிறித்தவர்கள் மீதான தாக்குதல்கள் மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே கிறித்தவர்கள் மீதான தாக்குதலில் முதன்மையான நிலமாக ஆப்பிரிக்கா அமைந்துள்ளதாகவும் பிரான்ஸ் ஓபன் டோர்ஸ் நிறுவனத் தலைவர் மைக்கேல் வெர்டான் தெரிவித்துள்ளார். 
இப்படியாக நாடு முழுக்க பாதிக்கப்படும் கிறித்தவர்களுக்கு ஆறுதலும் அரவணைப்பும் அளிக்கும் விதமாக இந்த அரசு சாரா ஓபன் டோர்ஸ் நிறுவன அமைப்பு தொடர்ந்து சேவை செய்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

source: ns7.tv