வெள்ளி, 6 செப்டம்பர், 2019

வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என ஸ்டாலின் நம்பிக்கை...!


Image
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில், 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரி பகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் எழுதிய வாழ்வும், பணியும் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தியாகிகள் நிறைந்த இயக்கமாக திமுக உள்ளது என்றும், அந்த இயக்கத்துக்கு தாம் தலைவராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.
தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆட்சியை திமுக பிடித்திருந்தால், சுதந்திரமாக மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலையே இருந்திருக்கும் என குறிப்பிட்ட ஸ்டாலின், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் திமுக மகத்தான வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். 
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடுகளின் மூலம் கிடைத்த முதலீடு குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன் முதல்வர் வந்தால் அவருக்கு பாராட்டு விழா நடத்த தயார் எனவும் ஸ்டாலின் கூறினார்.

credit ns7.tv