செவ்வாய், 24 செப்டம்பர், 2019

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Image
தமிழக அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழக அரசு சார்பில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தனியார் நிறுவனங்களின் விவரங்களை ஆராய வேண்டும் என்று மற்றொரு தனியார் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராயததால் பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உலக மூதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கானது நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் ஒரு வாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
credit ns7tv