புதன், 18 செப்டம்பர், 2019

இந்தியாவில் தமிழகம் தனித்து தெரிவதற்கு காரணம் பெரியார்: ஆ.ராசா

credit ns7.tv
Image
பெரியார், அம்பேத்கர் என்கிற தளவாடங்களை பயன்படுத்தி இந்துத்துவாவை வீழ்த்துவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியுள்ளார். 
தந்தை பெரியாரின் 141ம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக எம்.பி ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கவிஞர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கி.வீரமணி, உணவு, சீருடை கொடுத்து மாணவர்களை பள்ளிக்கு வரவைத்தால், மாணவர்களுக்கு பல்வேறு தேர்வுகள் வைத்து கொடுமை படுத்துவதாக கூறினார். ஒரே நாடு, ஒரே மொழி என்று பேசுபவர்கள் முடிந்தால் ஒரே சாதி என்று சொல்லட்டுமே என்றும் கி.வீரமணி பேசினார். 
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழகத்தில் தற்போது நடைபெறுவது தாமரை ஆட்சி என்று கூறினார். நாடாளுமன்றத்தில் வாழ்க பெரியார் என்றால், ஒரு பிரிவினர் ஜெய் ராம் என்பதாக தெரிவித்த அவர், இந்தியாவில் தமிழகம் தனித்து தெரிவதற்கு காரணம் பெரியார் என்றார். அரசியல் சாசன சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய ஆ.ராசா, பெரியார், அம்பேத்கர் என்கிற தளவாடங்களை பயன்படுத்தி இந்துத்துவாவை வீழ்த்துவோம் என்று பேசினார்.