செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சிறுவர், சிறுமிகளை டார்ச்சர் செய்கிறார்கள் : நித்யானந்தா மீது சிஷ்யை புகார்

Image
நித்யானந்தா சிறுவர், சிறுமிகளை கொடுமைப்படுத்துகிறார் என அவர் மீது குற்றம் சாட்டி அவரது முன்னாள் சிஷ்யை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்ற பெண் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நித்தியானந்தா ஆசிரமத்தில், தான் தங்கியிருந்த அனைத்து நாட்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன், ஆனால் அவை அனைத்தும் பொய் எனப் பிறகு தான் தெரிந்துகொண்டேன் என தெரிவித்தார். 
மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு தான் சென்றிருந்த போது, அங்கிருந்த சிறுவர்கள் சிலர் தன்னை சந்தித்து பல குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். 
ஆசிரமத்தில் உள்ளவர்களால் தாங்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறோம் எனவும், கழிவறைக்குச் செல்லக் கூட தங்களுக்கு அனுமதி இல்லை எனவும் இரும்பு கம்பிகள் நிறைந்த அறையில் தாங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளோம் எனவும் அந்த சிறுவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். 
நித்தியானந்தா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பின், சொந்த நாட்டுக்கே திரும்பி விட்டதாகத் சாரா தெரிவித்தார். ஆனால், நித்தியானந்தாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக, நித்தியானந்தா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv