வெள்ளி, 6 டிசம்பர், 2019

உலகத்தரம் வாய்ந்த "பீச்" ஆக மெரினாவை மாத்தனும்!- ஐகோர்ட்

Image
மெரினா கடற்கரையை 6 மாத காலத்திற்குள், உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மெரினா கடற்கரைப் பகுதிகளில் செயல்படும் மீன் வியாபாரிகளை ஒழுங்குப்படுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது. 
மெரினாவில் அமைந்துள்ள கடைகள் கடற்கரையின் ரம்மியமான தோற்றத்தை மறைக்கும் விதமாக அமைந்துள்ளதால், அவற்றை ஒழுங்குப்படுத்தி கடற்கரை நோக்கி திருப்பி வைக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
மேலும், மெரினா கடற்கரையை 6 மாத காலத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றவும், மெரினாவை தூய்மையாக வைப்பத்திருப்பது குறித்தும், வரும் 13-ம் தேதிக்குள் பதிலளிக்கவும், சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

credit ns7.tv