ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

​தலைமையாசிரியரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதால் தற்கொலை: 10ஆம் வகுப்பு மாணவி உருக்கமான கடிதம் August 5, 2018

Image

தலைமையாசிரியர் பாலியல் வன்புணர்வு செய்ததாக கடிதம் எழுதிவைத்துவிட்டு பள்ளி வளாகத்திலேயே மாணவி ஒருவர் நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள சிக்பள்ளி என்ற நகரில் அரசு உதவி பெறும் உறைவிடப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளியில் உள்ள கணிப்பொறி அறையில் கைமணிக்கட்டில் நரம்புகள் அறுபட்ட நிலையில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை மல்கங்கரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. 

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்த நிலையில், இறந்த மாணவியின் புத்தகத்தில் இருந்து மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

கைப்பற்றப்பட்ட அக்கடிதத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அதே பள்ளியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவியும் தன்னை தலைமையாசிரியர் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறினார்.

இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியரை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 376 (பாலியல் வன்புணர்வு), 341 (தவறாக வழிநடத்துதல்), போஸ்கோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இருப்பினும் மாணவி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் தலைமையாசிரியரே பாலியல் வன்புணர்வு செய்ததோடு கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.