திங்கள், 2 செப்டம்பர், 2019

விளம்பரங்களால் வெடித்த சர்ச்சை...! சர்ச்சையில் சிக்கிய ரெட் லேபிள் நிறுவனம்...!


Image
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ரெட் லேபிள் வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு அரசிலமைப்பு சட்டம் சொல்லும் மிக முக்கிய சேதி இது ஆனால், மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அது சர்ச்சையாவதும், கண்டனத்தை பெறுவதும் இயல்பானது. இந்தியா போன்ற பல மதத்தினர் வாழும் ஜனநாயக தேசத்தில், அனைத்து மத உணர்வுகளையும் மதிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அண்மையில் உணவு டெலிவரி கொண்டு வந்தவர் இஸ்லாமியர் என்பதால் ஆர்டரை கேன்சல் செய்து விட்டதாக ஒருவர் பதிவிட அவர் இணையவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகினார். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது ரெட் லேபிள் நிறுவனம்.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்றில், இந்து ஒருவர் விநாயகர் சிலையை வாங்குவதற்காக வருகிறார். அவரிடம் கடைக்காரர், அனைத்து சிலைகளையும் காண்பித்து விட்டு குல்லா எடுத்து மாட்டி கொள்கிறார். கடைக்காரர் இஸ்லாமியர் என தெரிந்ததும், சிலை வாங்க வந்தவர் அங்கிருந்து கிளம்ப முயல்வது போன்று அந்த விளம்பரம் அமைந்துள்ளது. red label நிறுவனத்தின் இந்த விளம்பரத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்துக்கள் சகிப்பு தன்மையற்றவர்களா? என ட்விட்டரில் அந்நிறுவனத்தை கண்டித்து வருகின்றனர். boycott redlabel என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அந்த நிறுவனத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் தவறிழைப்பது இயல்பானது. ஆனால் அதற்கு ஒட்டு மொத்த மதத்தினரின் மனம் புண்படுவது போல் விளம்பரம் வெளியிடுவது சரியா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பிட்ட இந்த விளம்பரத்தை அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
zomato விவகாரத்தில் ஆர்டரை ரத்து செய்ததாக இந்து ஒருவர் பதிவிட்டபோது, உங்களுக்கு சகிப்புதன்மை இல்லையா என கேள்வி எழுப்பிய அதே சமூக வலைதளவாசிகள் தான், இந்துக்கள் சகிப்புதன்மை இல்லாதவர்கள் என்ற ரீதியில் வெளியான விளம்பரத்திற்கும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவின் வெற்றிக்கான மந்திரம். அதனை உடைக்கும் செயல்களில் எவர் ஈடுபட்டாலும் இந்தியர்கள் குரல் எழுப்புவார்கள் என்பதே நிதர்சனம். 

credit ns7.tv